புதன், 24 டிசம்பர், 2014

ஆலை முன்பு முற்றுகையிட்டு முழக்கமிட்ட தொழிலாளர்கள்.

 பாக்ஸ்கான் தொழிலாளர்கள் ஆவேசம் ஆலை நுழைவு போராட்டம்
அ.சவுந்தரராசன் எம்எல்ஏ - 1000 தொழிலாளர்கள் கைது
 
பாக்ஸ்கான் தாழிற்சாலையை மூடக்கூடாது என்று வலியுறுத்தி அந்தஆலைக்குள் நுழைய முயன்ற சிஐடியுமாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் எம்எல்ஏ உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். நோக்கியாவைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூரில் இயங்கிவரும் பாக்ஸ்கான் ஆலை டிச. 24 முதல் மூடப்படும் என்று அந்தஆலையின் நிர்வாகம் மாவட்ட தொழிலாளர் நலத்துறையிடம் தெரிவித்தது. ஆலையை மூடுவதை எதிர்த்து தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தையடுத்து தொழிலாளர் நலத்துறையினர் தொழிற்சங்கத் தலைவர்களையும் நிர்வாகத்தையும் அழைத்து முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால் அதில் எந்த தீர்வும் எட்டப்படவில்லை. பேச்சுவார்த்தை நிலுவையில் இருக்கும்போதே ஆலையை மூட நிர்வாகம் அனுமதி கேட்டபோது தொழிலாளர் நலத்துறை அனுமதிக்கவில்லை. அதையும்மீறி திங்கட்கிழமை முதல் பணிக்குவரவேண்டாம் என்று தொழிலாளர்களுக்கு பாக்ஸ்கான் நிர்வாகம் தகவல் அனுப்பியது. தொழிலாளர்களுக்கு வேலை கிடையாது. ஆனால் தற்காலிக சம்பளம் மட்டும் வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தது.நிர்வாகத்தின் இந்த யோசனையை நிராகரித்த பாக்ஸ்கான் தொழிலாளர் சங்கம் (சிஐடியு) ஆலையை மீண்டும் திறந்து இயக்கவேண்டும் என்று கூறியது.
மேலும் ஆலையை திறக்காவிட்டால் செவ்வாயன்று (டிச.23) சிஐடியு சார்பில் மாநிலத்தலைவர் அ. சவுந்தரராசன் எம்எல்ஏ தலைமையில் ஆலைக்குள் நுழைவோம் என்றும் அறிவித்திருந்தது. இந்நிலையில், திட்டபடி செவ்வாயன்று காலை அ.சவுந்தராசன் தலைமையில் பாக்ஸ்கான் ஆலையின் ஊழியர்கள் ஆலையின் முன்பு கூடி நுழைவாயிலை திறந்து உள்ளே நுழைய முயன்றனர். ஆனால் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் ஆலையின் முன்பு குவிக்கப்பட்டு அனைவரையும் தடுத்துநிறுத்தி கைதுசெய்தனர். ஆலையின் கதவருகே தனியார் பாதுகாவலர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர். முன்னதாக ஆலையின் முன்பு கூடியிருந்த தொழிலாளர்களிடம் அ. சவுந்தரராசன் பேசுகையில், பாக்ஸ்கான் ஆலையை மூட அனுமதிக்கமாட்டோம். ஆலையை மீண்டும் திறந்து இயக்கப்படும் வரை போராட்டம் தொடரும் என்றார்.
இந்தப்போராட்டத்தில்  ஆயி ரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக