சனி, 8 நவம்பர், 2014

அகில இந்திய மாநாடு - இரண்டாம் நாள்


 மாநாட்டின் இரண்டாம் நாள் சார்பாளர்கள் நிகழ்வாகத் தொடங்கியது. சார்பாளர்கள் மாநாட்டின் தொடக்க உரையாற்றிய அகில இந்தியத் தலைவர் தோழர் வி.ஏ.என்.நம்பூதிரி நாம் அங்கீகரிக்கப்பட்ட சங்கமாக மாறிய பின்னர் பெற்ற ஊதியப் பலன்களையும் நிறுத்தப்பட்ட சுற்றுலாப் பணம் மற்றும் மருத்துவ நிதி போன்றவற்றை சங்கத்தின் ஒருங்கிணைப்புடன் போராடிப் பெறமுடியும் என்ற நம்பிக்கையுடன் மாநாட்டில் கலந்து கொண்டிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார். கேரளா, ஒரிசா போன்ற மாநிலங்களில் நமது நிறுவனம் லாபம் ஈட்டுவதைச் சுட்டிக் காட்டிய அவர் நமது பொருளாதாரப் பலன்களை அடைவதற்கு நமது மாநிலத்தையும் ஒரு ரூபாயாவது லாபம் ஈட்டுகின்ற மாநிலமாக மாற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். இன்னும் சில மாநிலங்களில் நாம் மாநில மாநாடுகள்கூட நடத்தவில்லை என்பதை வருத்தத்துடன் சுட்டிக் காட்டிய அவர் அவை விரைவில் நடத்தப்பட வேண்டும் என்பதையும் நினைவூட்டினார். ஓய்வூதியர் சங்கத்தின் பொதுச் செயலர் தோழர் கே.ஜி.ஜெயராஜ் வாழ்த்துரையாற்றினார்.
          அவர்களைத் தொடர்ந்து உரையாற்றிய பொதுச் செயலர் தோழர் அபிமன்யு நியாயமாக நடந்து கொண்டதற்காகக் கொலைசெய்யப்பட்ட  காஸியாபாத் மாவட்டத்தின் மாவட்டச் செயலரின் குடும்பத்தினருக்கு நமது சங்கம் அவரது மறைவிற்குப் பின்னரும் எந்த அளவிற்கு உறுதுணையாக இருக்கிறது என்பதைக் குறிப்பிட்டதுடன், கொலையாளிகள் தண்டனை பெறும்வரை நமது நடவடிக்கைகள் தொடரும் என்பதைக் குறிப்பிட்டார். புதிய அங்கீகார விதிகளின்படி என்எஃப்டி சங்கத்திற்கு கிடைத்த அங்கீகாரம் பற்றிய முணுமுணுப்பு இன்னும் சில தோழர்களிடம் இருப்பதைச் சுட்டிக்காட்டி, இன்றைய தொழிலாளர் விரோத உலகமயச் சூழலில் நாம் நம்முடைய போராட்டத்தின் ஒரு அங்கமாக அவர்களும் மாற்ற வேண்டியதன் தேவையை மீண்டும் வலியுறுத்தினார். கார்ப்பரேட் அலுவலகத்தில் இதுவரை எந்தப் போராட்டமும் நடைபெற்றதில்லை என்ற நிலையில் நாம் கார்ப்பரேட் அலுவலகத்தில் தர்ணாவிற்கான அரைகூவல் விடுத்ததும், நிர்வாகம் காவல்துறைக்கு பாதுகாப்புக் கேட்டுக் கடிதம் எழுதியது. நமது நிறுவன அலுவலகத்திற்குள் காவல்துறை நுழைவது தவறு. எங்களது சொத்துக்களின் மீது எங்களுக்கு அக்கறை இருக்கிறது என்பதை நிர்வாகத்திற்குச் சுட்டிக்காட்டி காவல்துறை பாதுகாப்பை ரத்துசெய்யச் செய்து, ஜனநாயக முறையில் கார்ப்பரேட் அலுவலகத்தில் தர்ணா நடத்தியதை நினைவு கூர்ந்தார். இரண்டாவது சங்கத்திற்கான அங்கீகாரம் கொடுக்கப்பட்ட சூழ்நிலையிலும்கூட நாம் கடந்த தேர்தலில் பெற்றதைவிட 2.3% வாக்குகள் அதிகம் பெற்றதைச் சுட்டிக் காட்டினார்.


          தொடர்ந்து அகில இந்தியத் தலைவர் தோழர் நம்பூதிரி மற்றும் நமது மாநிலத்தின் துணைச்செயலர்தோழர் இந்திரா ஆகிய இருவரின் ஒருங்கிணைப்பில் மகளிர் ஒருங்கிணைப்புக் குழு மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டு விவாதங்களை தொகுத்துரைத்த பொதுச் செயலர் தோழர் அபிமன்யு பெண்கள் மீதான சீண்டல்களைத் தவிர்ப்பதற்கான முதல்படி அவர்கள் பொதுத்தளத்தில் பொதுப்பணிகளில் தங்களை இணைத்துக் கொள்வது என்றார். இன்னும் மாவட்டச் செயலர்களாக, மாநிலச் செயலர்களாக பெண்கள் தங்களை வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம் என்பதைக் குறிப்பிட்ட அவர், இந்தூர் மாவட்டத்தில் மாவட்டச் செயலர் முதல் அனைத்துக் கிளைச் செயலர்களும் என அனைவரும் பெண் தோழர்களாக இருப்பதைப் பாராட்டினார்.
       














கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக